Monday 23 May 2011

திருஇடைமருதூர் (திருவிடைமருதூர்)

இறைவர் திருப்பெயர் : மருத வாணர், மகாலிங்கேசுவரர்
இறைவியார் திருப்பெயர் : பிருகச்சுந்தரகுஜாம்பிகை, பெருநலமுலையம்மை
தல மரம்  : மருதமரம்
தீர்த்தம்   : அயிராவணத்துறை, காவிரி, காருண்ய அமிர்த தீர்த்தம்
வழிபட்டோர்  : உமாதேவியார், ருத்திரர், மூத்த பிள்ளையார், முருகர், 
     பிரமன், திருமால்.
தேவாரப் பாடல்கள் : 1. சம்பந்தர் - 1. ஓடேகலன் உண்பதும், 
     2. தோடொர் காதினன், 
     3. மருந்தவன் வானவர், 
     4. நடைமரு திரிபுரம், 
     5. விரிதரு புலியுரி, 
     6. பொங்குநூல் மார்பினீர். 

     2. அப்பர்   - 1. காடுடைச் சுடலை, 
     2. பாசமொன்றிலராய், 
     3. பறையின் ஓசையும், 
     4. சூலப் படையுடையார், 
     5. ஆறு சடைக்கணிவர். 

     3. சுந்தரர்  - கழுதை குங்குமந் தான்.
idaimarudur temple

தல வரலாறு

  • இத்தல விநாயகர் அருள்மிகு மகாலிங்கப் பெருமானைப் பூசித்து பல உயிர்களும் உய்யும் வண்ணம் அரசாட்சி செய்து வந்தமையால் இவ்விநாயகப் பெருமான் அருள்மிகு ஆண்ட விநாயகர் என்னுந் திருநாமம் பூண்டு எழுந்தருளியுள்ளார்.
  • அகத்திய முனிவர் முதலிய முனிவர்களின் தவத்திற்கு இரங்கி அம்பிகை எழுந்தருளி வந்து காட்சி கொத்த சிறப்புடைய இத்தலத்தில், அம்முனிவர்களின் பொருட்டு அருள்மிகு மகாலிங்கப்பெருமானைக் குறித்து, அம்பிகையானவள் மௌனத்துடன் மூகாம்பிகையாக இருந்து தவம் புரிய, பெருமான் சோதி வடிவமாகவும், ஏகநாயக வடிவமாகவும் அம்பிகைக்கும் முனிவர்களுக்கும் காட்சி கொடுத்தருளினார்.
  • பூசை விதிகளைத் தேவர்களுக்கு அறிவுறுத்தற் பொருட்டு பரமசிவன் தம்மைத்தாமே அர்ச்சித்துக் காட்சியருளினார்.
  • மருத மரத்தைத் தல மரமாகக் கொண்டுள்ள மூன்று தலங்களான திருப்பருப்பதம்(வடநாடு), சோழநாட்டுத் திருஇடைமருதூர் மற்றும் திருப்புடைமருதூர்(பாண்டியநாடு) ஆகியவற்றுள் இது இடையாக உள்ளது.
  • சிவ பரிவார மூர்த்தத் தலங்கள் யாவும் அருகே அமையப்பெற்றதால் இது மகாலிங்கத்தலம் எனப்படுகிறது. அவையாவன:
    1. விநாயகர்- திருவலஞ்சுழி,
    2. முருகர்- சுவாமி மலை,
    3. நடராஜர்-சிதம்பரம்,
    4. தட்சிணாமூர்த்தி-ஆலங்குடி,
    5. சண்டேச்சுரர்- திருசேய்ஞலூர்,
    6. பைரவர்-சீர்காழி,
    7. நவக்கிரகம்-சூரியனார் கோவில்
  • வரகுண பாண்டியனின் ப்ரம்மஹத்தி தோஷம் நீங்கிய தலம்.

சிறப்புக்கள்

  • இத்தலம் சண்பகாரணியம், சத்திபுரம், தபோவனம், ஜோதிநகர், சர்வதீர்த்தபுரம், வில்வாரணியம், தருமவிருத்திபுரம், முத்திபுரம், பூலோக சிவலோகம், வீரசோழநகரம் முதலிய காரணப்பெயர்களைக் கொண்டு விளங்குகிறது.
  • உமாதேவியார், விநாயகர், சுப்பிரமணியர், கோடி உருத்திரர், விஷ்ணு, சந்திரன், பிரமாதி தேவர்கள், இலக்குமி, சரஸ்வதி, மூன்று கோடி முனிவர்கள் முதலியேர் பெருமானை பூசித்து பேறு பெற்றுள்ளனர்.
  • இத்தலத்தில் மகாலிங்கப் பெருமானுக்கு பூசை நடந்தபிறகே விநாயகப் பெருமானுக்கு பூசை நடைபெரும்.
  • இத்தலம் சந்திரனுக்குரிய தலமாகவும், வரகுண பாண்டியன் இத்தலத்திற்கு வந்து பெருமானை வழிபட்டு புரமஹத்தி தோஷம் நேங்கப் பெற்றதால் பிரமஹத்தி தோஷம் நீங்கும் தலமாகவும், 27 நட்சத்திரங்கள் வழிபட்டு அருள் பெற்றதால் நட்சத்திரத் தோஷ நிவர்த்தி தலமாகவும் விளங்குகிறது.
  • 27 நட்சத்திரங்களுக்கும், 27 லிங்கங்கள் ஆடல்வல்லான் மண்டபத்தில் அமைந்துள்ளன.
  • இத்தலம் காசிக்கு நிகரான தலமாகும்.
  • இத்தலத்தில் காருண்யாமிர்த தீர்த்தம், சோம தீர்த்தம், கனக தீர்த்தம், கல்யாண தீர்த்தம், ஐராவத தீர்த்தம் என முப்பத்துரண்டு தீர்த்தங்கள் உள்ளன.
  • இத்தலத்தில் உள்ள அசுவமேதத் திருச்சுற்றை வலம் வருவோர் அசுவமேத யாகம் செய்த பலனைப் பெறுவர்.
  • கொடுமுடித் திருச்சுற்றை வலம் வருவோர் கயிலாய மலையை வலம் செய்த பலனை அடைவர்.
  • பிரணவத் திருச்சுற்றில் இப்போதும் நாதோற்பத்தி விளங்கி வரும் சிறப்புடையது; இத்திருச்சுற்றை வலம் வருவோர் மெஞ்ஞானம் பெற்றுச் சிறப்பர்.
  • இத்தலப் பெருமானை திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர், கருவூர்தேவர், பட்டினத்தார், அருணகிரிநாதர், காளமேகப் புலவர் முதலானோர் பாடிப் பரவியுள்ளனர்.
  • பத்திரகிரியார் முத்தி பெற்ற திருத்தலம்.
  • இத்தலப் பெருமையினை சிவரகஸ்யம், ஸ்காந்தம், இலிங்கப்புராணம், பிரமகைவர்த்தம் முதலிய பிரபல கிரந்தங்கள் சிறப்பாக எடுத்துரைக்கின்றன.
  • மருதவனப் புராணம், திருவிடைமருதூர் உலா, திருவிடைமருதூர் கலம்பகம், திருவிடைமருதூர் பதிற்றுப் பத்தந்தாதி, திருவிடைமருதூர் நொண்டி நாடகம் முதலிய இலக்கியங்களும் இத்தலச் சிறப்பை விளக்குகின்றன.
  • பட்டிணத்தடிகளாரால் மும்மணிக்கோவை பாடப் பெற்றது.
  • இத்தலத்தில் தைப்பூச திருவிழா மிகவும் சிறப்புடையது.
  • சோழர், பாண்டியர், நாயக்கர், மராட்டியர் ஆகியோர் இத்திருக் கோயிலைத் திருப்பணி செய்துள்ளனர்.
  • சோழர்காலக் கல்வெட்டுகள் பல உள்ளன.

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
மயிலாடுதுறை-கும்பகோணம் இரயில் பாதையில் உள்ள இரயில் நிலையம். மயிலாடுதுறை, கும்பகோணம் ஆகிய இடங்களிலிருந்து பஸ் வசதி உள்ளது.

No comments:

Post a Comment